search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்- 2 பேர் மீது வழக்கு

    வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வாணியம்பாடி சின்ன வேப்பம்பட்டில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. தற்போது கல்லூரியில் தனித்தனி அறைகளில் 4 சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இதற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்று பார்வையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ராணி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

    அப்போது ஜோலார்பேட்டை தி.மு.க வேட்பாளர் தேவராஜின் உறவினர் ஆலங்காயம் முன்னாள் ஒன்றிய செயலாளர் அசோகன் மற்றும் குமார புதூரை சேர்ந்த தண்டபாணி ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் அடிக்கடி மையத்திற்குள் சென்று வந்த வண்ணம் இருந்துள்ளனர். அப்போது ராணி அடிக்கடி உள்ளே சென்று வர வேண்டாம் ஒவ்வொரு முறையும் சென்று வரும்போது அங்குள்ள புத்தகத்தில் பதிவு செய்யப்படும்.

    இனிமேல் நீங்கள் சென்றால் இங்கே பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் எனக் கூறினார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அசோகன் தண்டபாணி இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் ராணியை ஒருமையில் பேசியுள்ளனர். இன்னும் 2 நாட்களில் உன்னை தூக்கி விடுவேன் என மிரட்டினர்.

    இதுபற்றி ராணி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போது அசோகன், தண்டபாணி இருவரும் அடிக்கடி உள்ளே சென்று வந்தனர். அவர்களிடம் நோட்டில் பதிவு செய்துவிட்டு உள்ளே செல்லுங்கள் என கூறினேன். இதனால் அவர்கள் என்னை ஒருமையில் பேசினர். அனைத்து காவலர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தினர். மேலும் இன்னும் 2 நாட்களில் உன்னை தூக்கி விடுகிறேன் என கொலை மிரட்டல் விடுத்தனர்.

    நடுநிலையோடு பணியாற்றிவரும் என்னை ஒரு கட்சியை சேர்ந்தவர் என கூறினர். என்னை பணி செய்ய விடாமல் தடுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் அசோகன் மற்றும் தண்டபாணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாக்கு எண்ணும் மையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×