search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சேலத்தில் பீர்பாட்டிலால் குத்தி வியாபாரி கொலை

    சேலத்தில் டாஸ்மாக் பாரில் பீர்பாட்டிலால் குத்தி வியாபாரி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 40). இவர் ஆனந்தா பாலம் மார்க்கெட்டில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஆனந்தாபாலம் அடியில் உள்ள டாஸ்மாக் பாரில் தனது நண்பர்களான டவுன் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆமதிஉசேன் (30), பட்டக்கோவில் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (27) ஆகியோருடன் மது குடித்துக் கொண்டிருந்தார்.

    அங்கு மற்றொரு தரப்பான மேட்டுத் தெருவைச் சேர்ந்த மோகன், அவரது நண்பரான ஆட்டோ டிரைவர் கோகுலகிருஷ்ணன் ஆகியோரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதில் மோகன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கிருபாகரனின் நண்பர் ஒருவரின் மனைவியுடன் சுற்றித்திரிந்துள்ளார். இதனை கிருபாகரன் தரப்பினர் கண்டித்து இருவரையும் பிரித்து வைத்தனர்.

    இதுதொடர்பாக மோகன் பாரில் வைத்து ஏன் எங்களை பிரித்து வைத்தீர்கள்? என கேட்டதால் கிருபாகரன் தரப்பினருடன் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதும் மோகனும், கோகுல கிருஷ்ணனும் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து கிருபாகரன், ஆமதி உசேன், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக குத்தினர்.

    இதில் கிருபாகரன் உள்பட 3 பேருக்கும் தலை, வயிறு, கை கால்களில் காயம் ஏற்பட்டது. மேலும் கிருபாகரனை கத்தியாலும் வயிற்றில் குத்தினர். அப்போது இந்த தகராறை விலக்கி விட்ட பட்டக்கோவில் பகுதியைச் சேர்ந்த அம்ஜத் என்பவருக்கும் பீர்பாட்டில் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கிருபாகரன் உள்பட 4 பேரும் துடித்துக் கொண்டிருந்தனர்.

    இதை அறிந்த டவுன் உதவி கமி‌ஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட மோகன், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.

    படுகாயம் அடைந்த கிருபாகரன், ஆமதிஉசேன், சீனிவாசன், அம்ஜத் ஆகியோரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. கிருபாகரனுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் ஆபிரே‌ஷன் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் அவர் இன்று காலை பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து மோகன், கோகுல கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கிருபாகரன் கொலை செய்யப்பட்டதால் கிச்சிப்பாளையம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி ஆஸ்பத்திரியிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம் கிச்சிப்பாளையம், டவுன் பகுதியில் தொடர்ந்து ரவுடிகள் மோதல் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×