search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவோணம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

    திருவோணம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள இரண்டாம்புளிக்காடு பகுதியைச்சேர்ந்த வைரக்கண்ணு மகன் ஆனந்தன் (வயது 35). இவருக்கும், ஆவணம் வேட்டைக்காரன் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் செம்பருத்தி(32) என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகனும், 2 மகளும் உள்ளனர். இவர்கள் குறிச்சி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் செம்பருத்தியின் தங்கை கார்த்திகா(25) என்பவருக்கும், அதே ஆவணம் பகுதியை சேர்ந்த பசுபதி என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆனந்தனுக்கும், கார்த்திகாவிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திகாவிற்கும், அவரது கணவர் பசுபதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு கார்த்திகா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஆனந்தன் வீட்டிற்கு வந்து விட்டார். தனது தங்கைக்கும், தன்னுடைய கணவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதை அறிந்த செம்பருத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டார்.

    இதனை தொடர்ந்து ஆனந்தன், கார்த்திகா மற்றும் 6 குழந்தைகளும் குறிச்சியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆனந்தனுக்கும், கார்த்திகாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

    இந்த தகவலை ஆனந்தன், தனது உறவினரான ஜெகதீசன் என்பவருக்கு செல்போன் மூலமாக தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் ஆனந்தனும், கார்த்திகாவும் மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது.

    உடனடியாக இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×