search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் கிராம நிர்வாக அதிகாரி பலி - உறவினர்கள் முற்றுகை

    திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் கிராம நிர்வாக அதிகாரி இறந்ததால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    திருச்சி:

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி போதுமணி (வயது 45). இவர் திருக்கானூர்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக திருச்சி புத்தூரில் உள்ள ஒலிம்பியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி போதுமணி நேற்று உயிரிழந்தார்.

    இதுகுறித்து உறவினர்கள் கேட்டதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் போதுமணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் போதுமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×