search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    விழுப்புரம்:

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2-ந் தேதி எண்ணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி), வானூர் (தனி), செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

    விழுப்புரம் தொகுதிக்கு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியும், செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு செஞ்சி டேனி கல்வியியல் கல்லூரியும், திண்டிவனம், மயிலம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியும், வானூர் தொகுதிக்கு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், விக்கிரவாண்டி தொகுதிக்கு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியும், திருக்கோவிலூர் தொகுதிக்கு திருக்கோவிலூர் வள்ளியம்மை மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் வாக்கு எண்ணும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தற்போது நடந்து வருகிறது.

    குறிப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறையும், வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புக்கட்டை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு அந்த அறையை சுற்றிலும் இரும்புக்கம்பிகளால் சுற்றிலும் வலை அடிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, மருத்துவ குழுவினருடன் மருத்துவ அறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.

    இப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குகள் எண்ணும் இடத்தை சுற்றியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.

    அதுபோல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் அறைக்குள்ளும், அந்த அறையின் வெளிப்புற பகுதிகளிலும் மற்றும் வாக்கு எண்ணும் மைய வளாக பகுதிகளிலும், அங்குள்ள பிரதான நுழைவுவாயில் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு அங்கு வாக்கு எண்ணுவதற்கு ஏற்ப மையங்களை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நேற்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×