search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பணி வழங்க மறுப்பு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்

    திருவள்ளூர் அருகே பணி வழங்க மறுத்ததை கண்டித்து தொழிலாளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூரில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த அதிகத்தூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், கீழ்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், அகரம், ஏகாட்டூர், சேலை, தண்டலம், கம்மவார்பாளையம், மேல்நல்லாத்தூர் கிராம மக்கள் நிலம் கொடுத்தனர்.

    அவர்களில் 22 பேர் நிரந்தர தொழிலாளர்களாகவும், 158 பேர் பகுதி நேர தொழிலாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் புதிதாக வந்த அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்கள் 180 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுப்பு தெரிவித்தனர். கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு பணி வழங்கவில்லை.

    இதனால் அந்த தனியார் கம்பெனிக்கு நிலம் கொடுத்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 180 பேர் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக அந்த தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறியல், தர்ணா போராட்டம், தனியார் தொழிற்சாலைக்கு பூட்டு போடும் போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுநாள் வரையிலும் யாருக்கும் வேலை வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் ரவி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் இஸ்மாயில், துணைத்தலைவர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் 10 கிராம மக்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்பதாக கூறி கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் பொன்னையாவை நேரில் சந்தித்து இது சம்பந்தமாக மனு அளித்தனர்.
    Next Story
    ×