search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உரிய ஆவணங்கள் இல்லாததால் பழைய இரும்பு வியாபாரியிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல்

    பல்லடம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் பழைய இரும்பு வியாபாரி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 500-ஐ பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோதனை சாவடிகள், முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்து கொண்டு செல்லும் போது விசாரணை செய்து, பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில், நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் பல்லடம் நோக்கி சரக்கு வேன் ஒன்று வந்தது.

    அந்த வேனில் பொருட்கள் எதுவும் இல்லை. வண்டியில் அமர்ந்து இருந்தவரிடம் ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை விசாரித்தபோது அவர், கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த அபுதாகிர் (வயது 60), பழைய இரும்பு வியாபாரி என்பதும் பல்லடத்தில் பழைய இரும்பு வாங்குவதற்காக சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1,72,500 அதிகாரிகள் அரசு கருவூலத்தில் செலுத்தினர்.
    Next Story
    ×