search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனக்கோடி
    X
    தனக்கோடி

    தஞ்சை அருகே ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி என்ஜினீயர் கைது

    தஞ்சை அருகே புதிதாக மின் இணைப்பு வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது 62). இவர், தனது புதிய வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு பூதலூர் மின் வாரிய அலுவலக உதவி பொறியாளர் தனக்கோடியை(52) அனுகினார். அப்போது புதிய மின் இணைப்பு வழங்க தனக்கோடி தனக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று ஆரோக்கியசாமியிடம் கேட்டார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆரோக்கியசாமி இது குறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சசிகலா மற்றும் குழுவினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆரோக்கியசாமியிடம் கொடுத்து உதவி என்ஜினீயர் தனக்கோடியிடம் கொடுக்குமாறு கூறினர்.

    அதன்படி நேற்று மதியம் பூதலூர் துணை மின் நிலையத்தில் உள்ள உதவி என்ஜினீயர் அலுவலகத்தில் இருந்த உதவி என்ஜினீயர் தனக்கோடியிடம், ஆரோக்கியசாமி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று உதவி என்ஜினீயர் தனக்கோடியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட தனக்கோடியை போலீசார், கும்பகோணம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் அஜர்படுத்தினர். புதிதாக மின் இணைப்பு வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி என்ஜினீயர் கைது செய்யப்பட்ட சம்பவம் பூதலூர் மின்வாரிய அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×