search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமங்கலம் அருகே விவசாயி கொலை- மனைவி உள்பட 4 பேர் கைது

    திருமங்கலம் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது50), விவசாயி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், மாரிச்செல்வம் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    கிராமத்தின் அருகே உள்ள பெரிய கூடக்கோவில் பகுதியில் பெரியசாமிக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இரவு நேரத்தில் தனது தோட்ட பகுதியில் அவர் வலை விரித்து முயல் வேட்டையில் ஈடுபடுவார்.

    சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்த பெரியசாமி திடீரென மாயமானார். ஊரில் கோவில் திருவிழாவை யொட்டி நடக்கும் நாடகத்தை பார்க்க சென்று விட்டார் என்று கருதி மனைவி சாந்தி, கணவரை தேடவில்லை.

    ஆனால் காலை வரை பெரியசாமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு அவரை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல்வேறு பகுதியில் தேடிப் பார்த்தனர்.

    இந்த நிலையில் தோட்டத்து அருகே உள்ள சின்னமருது என்பவர் தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் நிர்வாண நிலையில் ரத்த காயங்களுடன் பெரியசாமி பிணமாக கிடந்துள்ளார்.

    இதுதொடர்பாக கூடக் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமங்கலம் டி.எஸ்.பி. வினோதினி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் போலீசார் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீர் இல்லாத கிணற்றில் இருந்த பெரியசாமி உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

    பெரியசாமி கழுத்தில் 9 இடங்களில் கூர்மையான பொருளைக் கொண்டு குத்தியதற்கான காயங்கள் காணப்பட்டன. எனவே அவரை யாரோ கொலை செய்து கிணற்றில் உடலை வீசியிருக்கலாம் போலீசார் சந்தேகித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன்விபரம் வருமாறு:-

    பெரியசாமியின் தம்பி சின்னச்சாமி. இவரது மகன் மொக்கசாமி (22), நெடு மதுரை தெற்கு தெருவைச் சேர்ந்த போஸ் மகன் அஜீத், மாரநாடு மகன் விஜய ராஜ் (20) ஆகிய 3 பேரும் முயல் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்கும், பெரிய சாமிக்கும் மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மொக்கராசு கட்டையால் பெரியசாமியை தாக்கினார். இதற்கு உடந்தையாக அஜித், விஜயராஜ் ஆகியோர் இருந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் ஆணியால் பெரியசாமியின் கழுத்தில் சரமாரியாக குத்தினர். இதில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை தொடர்ந்து பெரியசாமியின் வீட்டுக்கு சென்ற மொக்கசாமி, உனது கணவரை கொலை செய்துவிட்டோம் என சாந்தியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் கொலையை மறைத்துள்ளார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து மொக்கசாமி, அஜீத், விஜய ராஜ் மற்றும் சாந்தி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? சாந்தி ஏன் போலீசுக்கு தகவல் கொடுக்கவில்லை என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×