search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ஜோலார்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி

    ஜோலார்பேட்டை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற 8-ம் வகுப்பு மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முகமது ரபீக். பெங்களூருவில் உள்ள ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவரது 3-வது மகன் சமியுல்லா (வயது 13) ஜோலார்பேட்டை மினி விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மதியம் சமியுல்லா நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மங்கம்மாள் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்றான். குளத்தின் நடு பகுதிக்கு செல்லும் போது நீச்சல் தெரியாததால் அவன் நீரில் மூழ்கி தத்தளித்தான். அவன் சேற்றில் சிக்கிக்கொண்டதால் நண்பர்களால் காப்பாற்ற முடியவில்லை.

    அவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அருகே ஊதுபத்தி தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சமியுல்லாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது சமியுல்லா இறந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக முகமது ரபீக் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
    Next Story
    ×