search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி
    X
    தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி

    கொரோனா தாக்கம் அதிகரிப்பு - சென்னையில் 10 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றம்

    சென்னையில் இதுவரை முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.4 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தெற்கு ரெயில்வே பிரிவு அலுவலத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவருடன் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் உடன் இருந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் நிருபர்களுடன் கூறியதாவது:-

    சென்னையில் தினந்தோறும் 20 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிக்காக சென்னை மாவட்டத்தில் 35 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 1 வார காலத்துக்குள் தடுப்பூசி போடப்படும்.

    கொரோனாவில் இருந்து மீண்டு வர தடுப்பூசி தான் அறிவியல் பூர்வமாக கை கொடுக்கும் ஆயுதமாகும். தமிழகத்தில் சென்னையில் அதிக அளவு உயிரிழப்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது சென்னையில் இறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. எனவே அடுத்த 2 மாதங்களுக்கு பொது மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    கேரளா, பஞ்சாப், மராட்டியம் போன்ற மாநிலங்களில் இருந்து சென்னை வருகிறவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் அவசியமாகும். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் நிலையை பொறுத்து இ-பாஸ் முறை நாளுக்கு நாள் மாறுப்படும். வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வருகிறவர்களுக்கு எதுவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படாது.

    கொரோனா தொற்று சிறிது அதிகரித்திருப்பதால் கட்டுப்பாட்டு பகுதிகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.

    சென்னை முழுவதும் மொத்தம் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளது. இதில் 10 தெருக்களில்தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இந்த 10 தெருக்கள் கட்டுபாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் இந்த நோய் தொற்று பரவுவதை குறைக்கலாம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும். சென்னையில் இதுவரை முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.4 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×