search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தோவாளை பூ மார்க்கெட்டில் பிச்சி, முல்லை விலை ‘கிடுகிடு' உயர்வு

    குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர், வெளியூர் மட்டுமன்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். குறிப்பாக நெல்லை, ஓசூர், சேலம், ராயக்கோட்டை, நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து தோவாளை மார்க்கெட்டுக்கு பூக்கள் அதிகமாக வருகிறது.

    பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகமாகவும், தேவை அதிகம் இல்லாத நாட்களில் விலை குறைவாகவும் காணப்படும்.

    இந்தநிலையில் தற்போது கோவில் கொடைகள் மற்றும் அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவையொட்டி நேற்று மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து இருந்தது.

    அந்த வகையில் நேற்று முன்தினம் ரூ.1,100-க்கு விற்பனையான ஒரு கிலோ பிச்சி பூ நேற்று ரூ.900-ம் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,000-க்கு விற்பனையானது. அதேபோல ஒரு கிலோ முல்லை ரூ.2000-க்கு விற்கப்பட்டது. இதே போல் ரூ.600-க்கு விற்பனையான மல்லிகைப்பூ ரூ.900-க்கு விற்கப்பட்டது.

    பூக்கள் விலை உயர்வு குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-

    தோவாளை பூ மார்க்கெட்டுக்கு தற்போது பூக்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், தொடர்ந்து வரும் கோவில் விழாக்கள் மற்றும் அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது என்றனர்.

    மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

    அரளி ரூ.80, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.50, துளசி ரூ.20, தாமரை (100 எண்ணம்) ரூ.500, கோழிப்பூ ரூ.30, பச்சை ஒரு கட்டு ரூ.6, பாக்கெட் ரோஸ் ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.100, ஸ்டெம்பு ரோஸ் ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.40, சிவப்பு கேந்தி ரூ.40, சிவந்தி மஞ்சள் ரூ.180, சிவந்தி வெள்ளை ரூ.200, கொழுந்து ரூ.90, மரிக்கொழுந்து ரூ.100 என விற்பனையானது.
    Next Story
    ×