search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சேலம் விடுதியில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை

    சேலம் விடுதியில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெரியநல்லூர், நந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவர் கடந்த 20-ந்தேதி முதல் சேலம் 5 ரோடு சிக்னல் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    நேற்று மதியம் சரவணன் விடுதியில் இருந்து வெளியே சென்று விட்டு பின்னர் மீண்டும் விடுதிக்கு திரும்பினார். இன்று காலை வெகுநேரமாகியும் சரவணன் அறை கதவை திறக்கவில்லை. தினமும் அவர் காலையில் எழுந்து காபி வாங்கி வருமாறு அங்கு பணிபுரியும் ஊழியரிடம் கூறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலையில் சரவணன் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர் அறை கதவை தட்டினார். ஆனால் சரவணன் கதவை திறக்கவில்லை. இதனால் ஊழியர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது அறையில் சரவணன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதையடுத்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை திறந்து சரவணன் உடலை பார்வையிட்டனர். மார்பு பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தி அவரை யாரோ படுகொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    எதற்காக சரவணன் கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. விடுதியில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமிராவில் பதிவான காட்சிகளை கம்ப்யூட்டரில் பார்த்து, கொலையாளிகள் யார்? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் விடுதிக்கு வந்து சென்றவர்கள் யார்? யார்?, காதல் விவகாரமா? அல்லது பண விவகாரமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சரவணன் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இது பற்றி போலீசார், திருப்பூரில் வசிக்கும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எதற்காக சரவணன் சேலத்திற்கு வந்தார்? என்பது குறித்து உறவினர்களிடம் கேட்டறிந்து கொலையாளிகளை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.

    Next Story
    ×