search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    மெட்ரோ ரெயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது

    தமிழக அரசு மெட்ரோ ரெயிலுக்கான கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டண விவரத்தை வெளியிட்டது. மெட்ரோ ரெயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
    சென்னை:

    சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு முன்பாக 1 லட்சத்து 13 ஆயிரம் வரை அதிக பட்சமாக பயணிகள் தினசரி பயணித்து வந்தனர். நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

    நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த உடன் அரசு பிறப்பித்த தளர்வுகளின் அடிப்படையில் மெட்ரோ ரெயில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

    பயணிகளிடம் அதிகபட்ச கட்டணமாக ரூ.70 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை குறைக்க அனைத்து தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மெட்ரோ ரெயிலுக்கான குறைக்கப்பட்ட கட்டணம்

    இதனை பரீசிலித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய கட்டண விவரத்தை நேற்று வெளியிட்டது.

    அதன்படி டோக்கன் முறையில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டணம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு பத்து சதவீதமும், கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×