search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கலெக்டர் கேட்டறிந்தபோது எடுத்த படம்
    X
    கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கலெக்டர் கேட்டறிந்தபோது எடுத்த படம்

    கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

    கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று மதியம் திடீரென வந்தார். அங்கு அவர், வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். மேலும், வெளிநோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கும் இடம், மருந்து கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்டு, மருந்துகள் முறையாக பாதுகாக்கப்படுகிறதா என்பதை ஆராய்ந்தார்.

    பின்னர் உள்நோயாளிகள் பிரிவுக்கு சென்ற கலெக்டர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் சி.டி. ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், டயாலிசிஸ் அறை, அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து இருதய மருத்துவர் மாற்றுப்பணியில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பணியாற்றுகிறார். அவர் எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்வார். கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் 3 அல்ட்ராசோன் எந்திரங்கள் உள்ளன. அதில், ஒன்றை எக்கோ கருவியாக மாற்றி பயன்படுத்தலாம். இந்த 3 அல்ட்ராசோன் கருவிகள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு, குடல்வால் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளலாம்.

    சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதனை அறுவை சிகிச்சை இன்றி அகற்றுவதற்கான எந்திரம் பொருத்தப்பட்டு வருகிறது. இதற்கு பயிற்சி பெற்ற டாக்டர்களும் உள்ளனர். அந்த எந்திரம் இன்னும் 2 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் கமலவாசன், உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×