search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பு- முதலமைச்சர் அறிவிப்பு

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் அதிகரித்து வரும் வாகன பெருக்கமும், மக்கள்தொகை நெருக்கமும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

    நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்ட போதிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படவில்லை. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டு வந்தனர். சுமார் ரூ.22 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் சென்னையில் செயல்படுத்தப்பட்டது.

    சென்னை விமான நிலையம்-வண்ணாரப் பேட்டை வரை ஒருவழித்தடமும், விமான நிலையம்- சென்ட்ரல் வரை மற்றொரு வழித்தடத்திலும் மொத்தம் 45 கி.மீ. தூரத்திற்கு முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    முதல் கட்டமாக உயர்மட்ட பாதையிலும், பின்னர் சுரங்கப் பாதையிலும் படிப்படியாக சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    2015-ம் ஆண்டு முதல் சென்னையில் மெட்ரோ ரெயில் ஓடத்தொடங்கியது. சேவை தொடங்கியது முதலே கட்டணம் உயர்வாக இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். ஏழை, நடுத்தர மக்களும் பயணம் செய்யும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதற்கிடையில் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே கடந்த 14-ந்தேதி சேவை தொடங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணம் ரூ.60 ஆக இருந்த நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு சேவை நீட்டிக்கப்பட்டதால் அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்பட்டது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை மாநகரத்தை உலகத்தரத்திற்கு மேம்படுத்த, பல்வேறு சிறப்பான உட்கட்டமைப்பு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்.

    பெரு நகரான சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், மக்களின் பயண நேரத்தைக் குறைப்பதற்காகவும், பயணம் எளிமையாகவும், வசதியாகவும் அமைய, தொலைநோக்குப் பார்வையோடு, மெட்ரோ ரெயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அம்மா அரசும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது. அதன் விளைவாகத்தான், இன்று இத்திட்டத்தின் முதல் கட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

    118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

    5 ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து, 6-ம் ஆண்டில் தனது சேவையைத் தொடர்கிறது. இதுவரை 7.25 கோடி பயணிகள் மெட்ரோ ரெயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

    மெட்ரோ ரெயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று மெட்ரோ ரெயில் கட்டணம் குறைக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    * கியூ.ஆர். கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

    * ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் - தற்போதுள்ள கட்டம்-1ன் 45 கி.மீ வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் 100 ரூபாய் ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 100 ரூபாயாகவே இருக்கும்.

    * ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் - தற்போதுள்ள கட்டம்-1-ன் 45 கி.மீ வழித்தடப் பகுதிகளுக்கான கட்டணம் 2500 ரூபாய் ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ வழித்தடத்திற்கும் அதே 2500 ரூபாய் கட்டணம்தான்.

    * ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி. (வரையறுக்கப்படாத பயண அனுமதி சீட்டுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நாட்களில் செல்லுபடியாகும் அனுமதி சீட்டுகள் நீங்கலாக)

    இந்த ஆணை நாளை மறுநாள் (22-ந்தேதி) முதல் அமலுக்கு வருகின்றது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நடைமுறைபடுத்தப்படவுள்ள இந்தக் கட்டணக் குறைப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களது பயணங்களை குறைந்த செலவில், நிறைவாக மேற்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×