search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    நிலக்கோட்டை அருகே அதிமுக பிரமுகரை அடித்து கொன்ற கும்பல்- அமமுக நிர்வாகி கைது

    நிலக்கோட்டை அருகே தகராறை விலக்கி விட வந்த அதிமுக பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 53). இவர் அ.தி.மு.க. பிரமுகராகவும் கோர்ட்டில் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது உறவினர் நாகராஜ் (35). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று இரவு நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கர்குளத்தைச் சேர்ந்த கண்டிகருப்பன் (46) என்பவர் குடிபோதையில் ஆட்டோவை சவாரிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    போதையில் இருந்ததால் வர முடியாது என நாகராஜ் கூறி விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதன் பின் அங்கிருந்து சென்ற கண்டிகருப்பன் தனது உறவினரான தங்கபாண்டி (37) என்பவர் தலைமையில் பிரதாப், ஜான்சன், கணேசன், குட்டையன், சின்னராசு, இருளப்பன் உள்பட 10 பேர் பயங்கர ஆயுதங்களுடன் செங்கோட்டைக்கு வந்தனர்.

    நான் அழைத்தால் ஆட்டோ சவாரிக்கு வர மாட்டாயா? என நாகராஜிடம் தகராறு செய்தனர். இதனை பார்த்த செல்வராஜ் (53) தட்டிக்கேட்டு அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செல்வராஜை சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் செல்வராஜ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து செல்வராஜின் மகன் புரட்சிமணி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தகராறை விலக்கி விட வந்த செல்வராஜை அடித்து கொன்ற 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தங்கபாண்டியை கைது செய்தனர். இவர் அ.ம.மு.க. நகர செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×