search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆலங்குளம் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை

    ஆலங்குளம் அருகே விவசாயி வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 52). விவசாயி. இவருக்கு வேல்மயில் என்ற மனைவியும் இசக்கியம்மாள், சிவனியம்மாள், மாரியம்மாள் ஆகிய 3 மகள்களும், முருகன் (22) என்ற மகனும் உள்ளனர். மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் முத்து தனது தாயார் சுடலியம்மாள் மற்றும் மனைவி, மகனுடன் வீட்டில் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் முத்து தனது மனைவி மற்றும் தாயாரை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டார். முருகன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கிரிக்கெட் விளையாட சென்றார். பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பினார்.

    அப்போது வீடு திறந்து கிடந்ததை கண்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    முத்துவிடம் நடத்திய விசாரணையில், ரூ.12 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது தெரியவந்தது. முத்து குடும்பத்தினர் தோட்டத்துக்கு செல்லும்போது வீட்டை பூட்டி சாவியை, மறைவான இடத்தில் வைத்துவிட்டு செல்வது வழக்கம்.

    அதேபோல் நேற்று முருகன் வீட்டை பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அப்போது, மர்ம நபர்கள் வந்து சாவியை தேடிக் கண்டுபிடித்து எடுத்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி சென்றுள்ளது தெரியவந்தது.

    மேலும் கைரேகை நிபுணர் ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தார். நெல்லையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் வரை ஓடிச் சென்று திரும்பி வந்துவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    ஆலங்குளம் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×