search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    திருப்பூரில் நண்பரை கழுத்து அறுத்து கொன்ற வாலிபர்

    திருப்பூரில் நண்பரை கழுத்து அறுத்து கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    தஞ்சை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவர் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி 5-வது வீதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இவரும், திருப்பூரில் பணியாற்றி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த் (27) என்பவரும் நண்பர்கள் ஆனார்கள். இவர்கள் 2 பேரும் சேர்ந்து பனியன் தொழில் தொடர்பான பாலிபேக் நிறுவனத்தை தொடங்க முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி புதிய நிறுவனத்தை 2 பேரும் சேர்ந்து தொடங்கினர். இந்த நிறுவனத்தில் அரவிந்த், ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தார். ஆனால் மூர்த்தி, பணம் கொடுக்காமல் நிறுவனத்தில் பங்குதாரராக செயல்பட்டார். இது அரவிந்த்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் மூர்த்தியிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

    நேற்று இரவு அவர்கள் நிறுவனத்தில் அரவிந்த்தும், ஊழியர்கள் 2 பேரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மூர்த்தி அங்கு வந்தார். அவரிடம் அரவிந்த் நிறுவனத்துக்குரிய பணத்தை கேட்டார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. ஆத்திரம் அடைந்த அரவிந்த், அங்கு கிடந்த கத்தியை எடுத்து மூர்த்தியின் கழுத்தை அறுத்தார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த மூர்த்தி அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். பின்னர் அரவிந்த் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை தேடி வருகிறார்கள். மூர்த்தியின் உடலை மீட்ட போலீசார் உடலை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொல்லப்பட்ட மூர்த்திக்கு, வெண்ணிலா என்ற மனைவியும், வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர். வைஷ்ணவி தஞ்சையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    Next Story
    ×