search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் பழனிசாமி
    X
    முதலமைச்சர் பழனிசாமி

    முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்கிய கேரள முதல்வருக்கு நன்றி - முதலமைச்சர் பழனிசாமி

    எனது கோரிக்கையை ஏற்று முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்கிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    இந்த அணைக்கு கடந்த 1980-ம் ஆண்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. வல்லக்கடவில் இருந்து வனப்பகுதி வழியாக மின்கம்பங்கள் அமைத்து மின் கம்பிகள் கொண்டு செல்லப்பட்டன. கடந்த 2000-ம் ஆண்டு வல்லக்கடவு வனப்பகுதியில் மின்சார கம்பி உரசியதில் காட்டு யானை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து முல்லை பெரியாறு அணைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மின் கம்பங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லாமல், தரையில் குழாய்கள் பதித்து மின் கம்பிகள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி முதற்கட்டமாக ரூ.95 லட்சம் வைப்புத்தொகை கேரள மின்வாரியத்துக்கு தமிழக பொதுப் பணித்துறை சார்பில் செலுத்தப்பட்டது. ஆனால் மின் இணைப்பு கொண்டு செல்வதற்கு கேரள வனத்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மூவர் கண்காணிப்பு குழுவின் ஆய்வு கூட்டங்களிலும் இதுகுறித்து விவாதித்து மின்இணைப்பு வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.

    இதையடுத்து வல்லக்கடவில் இருந்து சுமார் 5.65 கிலோமீட்டர் தூரத்துக்கு பூமிக்கு அடியில் குழாய்கள் பதித்து மின்இணைப்பு கம்பிகள் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வல்லக்கடவில் இருந்து அணைக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் தற்போது நிறைவு பெற்றன. 

    இதற்கிடையே, முல்லை பெரியாறு அணைக்கு நேற்று முதல் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு அணைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டதால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்கிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எனது கோரிக்கையினை ஏற்று, முல்லை பெரியாறு அணையின் செயல்பாட்டிற்கு மீண்டும் மின்சாரம் வழங்கிய கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கும், கேரள மாநில மின்சாரத்துறை மந்திரி எம்.எம்.மணிக்கும் தமிழ்நாடு பொதுமக்கள் சார்பாக, குறிப்பாக விவசாயப் பெருமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×