search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமங்கலம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி- கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

    திருமங்கலம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில் செயல்பட்டு வரும் முத்தூட் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    அவர்கள் லாக்கரை உடைக்க முயன்றபோது அலாரம் அடித்ததால் தப்பி ஓடி விட்டனர்.

    இதற்கிடையில் அலாரம் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளை முயற்சி நடந்து இருப்பது சி.சி.டி.வி. கேமிரா பதிவு மூலம் தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில் திருமங்கலம் துணை சூப்பிரண்டு வினோதினி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த தனிப்படையினர் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான உருவங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    கள்ளிக்குடி-மருதங்குடி சாலையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 பேர் சந்தேகத்திற்கிடமாக வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். 2 பேரும் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததால் தனிப்படையினருக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது.

    தங்களிடம் உள்ள கொள்ளையர்களின் உருவபடத்தை ஒப்பிட்டு பார்த்தபோது அவர்கள்தான் முத்தூட் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் மானாமதுரை அருகே உள்ள தஞ்சாகூரை சேர்ந்த சேதுராமன் மகன் ராம்குமார் என்ற பாயாசம் (வயது20), மதுரை சோலையழகுபுரம் முருகன் மகன் கார்த்தி என்ற வெள்ளை கார்த்தி (20) என தெரியவந்தது.

    இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ராம்குமார் மீது கொலை வழக்கும் உள்ளது. இவரது உறவினர்தான் வெள்ளை கார்த்தி. இவர் சிவகாசியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    கைதான இருவரும் மேலும் 2 பேருடன் சேர்ந்து சம்பவத்தன்று விருதுநகர், சமயநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    கள்ளிக்குடியில் ஜவுளிக் கடை, முத்தூட் வங்கியில் கைவரிசை காட்டி உள்ளனர். இதன் அடிப்படையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×