search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சண்முகம்
    X
    சண்முகம்

    தமிழக அரசின் ஆலோசகராக சண்முகம் நியமனம்

    தலைமை செயலாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து தமிழக அரசின் ஆலோசகராக க.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழக அரசின் 46-வது தலைமை செயலாளராக க.சண்முகம், 2019-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் கொரோனா காரணமாக 2 முறை தலா 3 மாதங்கள் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    பணி நீட்டிப்பு செய்யப்பட்ட காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இதைத்தொடர்ந்து அவர், தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது.

    அந்த உத்தரவில், 'தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள க.சண்முகம், இன்று (திங்கட்கிழமை) முதல் ஓராண்டுக்கு இந்த பணியில் இருப்பார்' என்று கூறப்பட்டுள்ளது.

    க.சண்முகம், சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர். 7.7.1960-ல் பிறந்த இவர், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. (வேளாண்மை) படிப்பை முடித்தவர். 1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வான இவர், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக தனது பணியை தொடங்கினார்.

    சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றி உள்ளார். ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை செயலாளர் போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    க.சண்முகம், தமிழக அரசின் ஆலோசகராக இன்று பொறுப்பேற்றுக்கொள்கிறார்.
    Next Story
    ×