search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜே.பி.நட்டா
    X
    ஜே.பி.நட்டா

    மதுரையில் இன்று பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை

    மதுரையில் இன்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
    மதுரை:

    தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இன்று காலை மதுரை ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் அரங்கத்தில் ஜே.பி.நட்டா பா.ஜனதா உயர்மட்ட ஆலோசனை குழு மற்றும் கட்சியின் பல் வேறு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி குறித்தும், போட்டியிடும் இடங்கள் மற்றும் தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், தேர்தல் பணிகள் பற்றியும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அதன் பிறகு பா.ஜனதா கட்சியில் இணைந்தவர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளை அவர் சந்தித்தார்.

    இன்று மாலை சமுதாய தலைவர்கள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும் ஜே.பி.நட்டா முக்கிய பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து அளிக்கிறார். மாலை 6.30 மணிக்கு மதுரை ரிங்ரோடு அம்மா தாமரை திடலில் மதுரை, கன்னியாகுமரி மண்டல மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பளருமான சி.டி.ரவி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுக்கூட்டத்திற்கு பிறகு ஜே.பி.நட்டா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    முன்னதாக நேற்று இரவு மதுரை வந்த ஜே.பி. நட்டாவுக்கு பா.ஜனதா கட்சி தொண்டர்கள் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். பூரண கும்ப மரியாதையுடன் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜே.பி.நட்டா திறந்த ஜீப்பில் சென்று கட்சி தொண்டர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
    Next Story
    ×