search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவி பலி

    சங்கரன்கோவில் அருகே பூப்பறிக்க சென்ற மாணவி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை அடுத்த மேல ரெங்கையாபுரத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி கவிமதி. இவர்களுக்கு விஷ்ணு லெட்சுமி(வயது 10) என்ற மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இதில் விஷ்ணு லெட்சுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.வரதராஜன் கட்டிட தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தற்போது பூக்கள் பயிரிட்டுள்ளார்.

    தினமும் காலை குடும்பத்துடன் சென்று பூக்கள் பறித்துவிட்டு அதன்பின் வீடு திரும்புவது வழக்கம். நேற்றும் குடும்பத்துடன் அவர்கள் பூப்பறிக்க சென்றனர். அப்போது இயற்கை உபாதை கழிப்பதற்காக மாணவி விஷ்ணு லெட்சுமி சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.

    நீண்ட நேரமாகியும் மகளை காணாததால் அவரது பெற்றோர் தேடிப்பார்த்தனர். அப்போது கிணற்றில் அவரது செருப்பு மிதந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அங்கு விரைந்து வந்த அவர்கள் கிணற்றில் மூழ்கிய விஷ்ணு லெட்சுமியின் உடலை மீட்டனர். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த குருவிகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×