search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை வழக்கில் கைதான விஜயசாந்தி, வித்யா, ஆசைப்பாண்டி, பிரபாகரன் ஆகியோரை படத்தில் காணலாம்.
    X
    கொலை வழக்கில் கைதான விஜயசாந்தி, வித்யா, ஆசைப்பாண்டி, பிரபாகரன் ஆகியோரை படத்தில் காணலாம்.

    தேவதானப்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் காதலி உள்பட 4 பேர் கைது

    தேவதானப்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் காதலி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையில், பாலூத்து என்ற இடத்திற்கு அருகில் புதருக்குள் கடந்த 21-ந்தேதி ஒரு ஆண் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் திண்டுக்கல் மாவட்டம் விருவீடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் ஆனந்தராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது.

    கூலித்தொழிலாளியான ஆனந்தராஜை காணவில்லை என்று ஏற்கனவே விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது.

    கொலையாளிகளை பிடிக்கவும், கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்கவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், ஆனந்தராஜ், பெரியகுளம் அருகே வடுகப்பட்டியை சேர்ந்த தனது மாமா முருகனின் மகள் விஜயசாந்தியை (19) காதலித்து வந்ததாகவும், காதல் பிரச்சினையில் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதையடுத்து வடுகப்பட்டியில் உள்ள விஜயசாந்தியின் வீட்டுக்கு போலீசார் சென்றபோது வீடு பூட்டி கிடந்தது.

    அதேநேரத்தில் விஜயசாந்தி தலைமறைவாக இருந்ததும், கேரளாவில் வசித்து வரும் அவருடைய அக்கா வித்யா (30) கடந்த சில நாட்களுக்கு முன்பு வடுகப்பட்டிக்கு வந்து சென்றதும் போலீசாருக்கு சந்தேகத்தை அதிகரித்தது. இதனால், தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று வித்யாவை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் தனது தங்கை விஜயசாந்தி மற்றும் திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த தனது பெரியப்பா கவிதாசனின் மகன் பிரபாகரன் (25) ஆகியோருடன் சேர்ந்து ஆனந்தராஜை கொலை செய்து, பிணத்தை எரித்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து வித்யாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் மதுரையில் பதுங்கி இருந்த விஜயசாந்தி, பிரபாகரன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொலை சம்பவம் தெரிந்தும் அவர்களுக்கு மதுரையில் அடைக்கலம் கொடுத்ததாக வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிமாயன்பட்டியை சேர்ந்த பால்சாமி மகன் ஆசைப்பாண்டி (30) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கினர். இதில் விஜயசாந்தி பரபரப்பான வாக்குமூலம் அளித்து உள்ளார். அந்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    விஜயசாந்தி பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஆனந்தராஜ் அவருடைய மாமா மகன். அதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். விஜயசாந்தியை அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதை நம்பி அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார்.

    இந்நிலையில், ஆனந்தராஜ் வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். இது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதுகுறித்து தனது அக்கா வித்யாவிடமும், பிரபாகரனிடமும் தெரிவித்துள்ளார். பின்னர் தனக்கு துரோகம் செய்த ஆனந்தராஜை கொலை செய்ய அவர்கள் திட்டம் தீட்டினர். மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையோரம் உள்ள புதர் பகுதியில் அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக அந்த இடத்தை அவரும், வித்யா, பிரபாகரனும் சேர்ந்து கடந்த 17-ந்தேதி நேரில் சென்று பார்த்தனர். பின்னர் ஆனந்தராஜை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் பார்த்து பேச வேண்டும் என்று விஜயசாந்தி அழைத்துள்ளார். அவரும், கடந்த 18-ந்தேதி சம்பவ இடத்துக்கு வந்தார்.

    அவர்கள் இருவரும் புதருக்குள் சென்று தனிமையில் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அங்கு ஏற்கனவே, வித்யா, பிரபாகரன் மறைந்து இருந்தனர். ஆனந்தராஜிடம் தனிமையில் பேசிக்கொண்டே எதிர்பாராத நேரத்தில் அவருடைய தலையின் பின்பகுதியில் உருட்டுக்கட்டையால் விஜயசாந்தி தாக்கியுள்ளார். உடனே மறைந்து இருந்த பிரபாகரன் அங்கு வந்து ஆனந்தராஜின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் இறந்து விட்டார்.

    பின்னர் விஜயசாந்தியும், வித்யாவும் அங்கேயே இருநதுள்ளனர். பிரபாகரன் ஜெயமங்கலத்துக்கு சென்று 10 லிட்டர் கேனில் டீசல் வாங்கி வந்துள்ளார். அந்த டீசலை பிணத்தின் மீதும், அங்கிருந்த புதரின் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் வத்தலக்குண்டு வழியாக தப்பிச் சென்று விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    காதலித்து வேறு திருமணம் செய்ய முயன்ற நபரை காதலியே அழைத்து தீர்த்து கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×