search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி - முக ஸ்டாலின்
    X
    எடப்பாடி பழனிசாமி - முக ஸ்டாலின்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - முக ஸ்டாலின் அறிவிப்பு

    ஊழல் குற்றச்சாட்டுக்கு தடை பெற்ற வழக்கை வாபஸ் பெற்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    திருவொற்றியூர்:

    சென்னை வட கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவொற்றியூர் பெரியார் நகரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் நிகழ்ந்த தொல்லைகளுக்கு முடிவுகட்ட தயாராகிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது உறுதி. அந்த ஆட்சி மாற்றத்தை தரப்போகும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது முக்கியமாகும். அதற்காகவே பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் திட்டத்தை தி.மு.க. முன்னெடுக்கிறது.

    கொரோனா காலத்திலும், நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை நேரடியாக சந்தித்து பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளோம். ஆளும் கட்சி செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் எதிர்கட்சியாக நாம் நிறைவேற்றிக் காட்டியுள்ளோம். கொரோனா காலத்தில் எந்த உதவிகளையும் ஆட்சியாளர்கள் செய்யவில்லை. மாறாக கொரோனா காலத்திலும் முகக் கவசம், பிளீச்சிங் பவுடர் என அனைத்திலும் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்தனர்.

    இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் இந்த கொள்ளை போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகு நிச்சயம் அவர்கள் அனைவரும் கூண்டில் ஏற்றப்படும் நிலைவரும்.

    நாளை ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் திறக்க இருக்கிறார்கள். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்கள் ஜெயலலிதா மணிமண்டபத்தை திறக்க இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு பூஜிக்கும் அவர்கள் ஜெயலலிதாவின் மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடிந்ததா?

    ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் பத்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர்களாக அண்ணா எம்.ஜி.ஆர். இருந்த போது, அவர்களும் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களது உடல் நிலை குறித்து தினமும் அரசு குறிப்பு வெளியானதை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால் ஜெயலலிதாவுக்கு அப்படி நடந்ததா?

    சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியான சமயம் சசிகலாவிடம் எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்- அமைச்சர் பதவியைப் பெற்றார்? இப்படிக்கேட்டால் போதும் உடனே கருணாநிதியை கேவலமாக விமர்சிக்கத் தொடங்கி விடுவார்கள். எதற்கெடுத்தாலும் நேருக்கு நேராக விவாதத்திற்கு தயாரா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி வருகிறார்.

    கவர்னரிடம் ஆதாரத்துடன் ஊழல் பட்டியலை கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். பொத்தாம் பொதுவாக ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கொடுக்கவில்லை. ஆதாரத்துடன் பட்டியலை சமர்ப்பித்து இருக்கிறோம். முதல்-அமைச்சர் முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை ஆதாரத்துடன் ஒரு பட்டியலை சமர்ப்பித்து இருக்கிறோம்.

    தமிழக நெடுஞ்சாலைத்துறையில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் ரூ 4000 கோடி ஊழல் நடந்து இருப்பதையும், அந்தப்பணம் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்து தி.மு.க. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சி.பி.ஐ. வழக்குக்கு பரிந்துரை செய்தது. தைரியம் இருந்தால் அந்த வழக்கை சந்தித்து இருக்க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சென்று தடை வாங்கினார் எடப்பாடி பழனிசாமி.

    ஆனால் இப்போது நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாரா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் தயார்தான். நான் சொல்லும் இடத்தில் கூட வேண்டாம் நீங்கள் சொல்லும் இடத்திற்கு கூட இப்போதே வருகிறேன். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்கி விட்டு வாருங்கள். ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதை பற்றி விசாரிக்கக் கூடாது என்பதுதான் மரபு.

    கொளத்தூர் தொகுதியிலேயே என்னால் மனு வாங்க முடியவில்லை என்று ஒரு அமைச்சர் விமர்சிக்கிறார். அமைச்சர் அவர்களே தைரியமிருந்தால் கொளத்தூருக்கு வாருங்கள். அவர் சொல்கிறார் ராயபுரம் தொகுதியில் நான் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்று கூறிக் கொண்டு வருகிறார்.

    ஸ்டாலின் அல்ல ஒரு சாதாரண தி.மு.க. தொண்டனை ராயபுரம் தொகுதியில் நிறுத்தி அங்கு உங்களை தோற்கடித்து காட்டட்டுமா? நாங்கள் இல்லை, மக்களே அதற்கு தயாராகி விட்டார்கள். எனவே தி.மு.க.வுக்கு வலுசேர்க்கும் வகையில் மக்கள் என்றும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×