
ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் பிடிபட்ட நபரின் தகவல் அடிப்படையில் ராமநாதபுரம் நேரு நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 260 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அதுதொடர்பாக 13 பேரை கைது செய்தனர். 5 நாட்களுக்கும் மேலாக இவர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. யார், யார் இதுபோன்ற கடத்தலில் ஈடுபடுகின்றனர், எங்கிருந்து கஞ்சா வருகிறது, எவ்வாறு கொண்டு செல்கின்றனர், மறைமுகமாகவும், நேரடியாகவும் இதில் யார் ஈடுபடுகிறார்கள், இவர்களுக்கு உதவுவது யார்? என்பது போன்ற தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன.
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் அச்சுந்தன் வயல் பகுதியில் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜனகன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது காரின் பின்பகுதியில் இருக்கையை கழற்றி எடுத்துவிட்டு, அதில் 5 மூடைகளில் தலா 30 கிலோ வீதமும், ஒரு சிறிய மூடையில் 10 கிலோவும் என மொத்தம் 160 கிலோ கஞ்சாவை கடத்தலுக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காரில் இருந்த மதுரை மேலூர் திருவாத்தூர் கீழத்தெரு விஜயகுமார் (வயது 34), மேலூர் பொட்டானிபட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(41), புதுப்பட்டி கக்கனையா (48), சிவகங்கை தொண்டிரோடு 7-வது குறுக்குத்தெரு பிரசாந்த் (28) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் பகுதியில் இருந்து இந்த கஞ்சாவை வாங்கி வந்ததாகவும், மண்டபம் பகுதியை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்ல இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அவர் மூலம் கடல்வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்தோணியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.