search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவில்பட்டியில் பெட்ரோல் பங்க்கில் பயங்கர தீவிபத்து - புதுமாப்பிள்ளை பலி

    கோவில்பட்டியில் பெட்ரோல் பங்க்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தரையில் பதிக்கப்பட்டு இருந்த டேங்கருக்குள் இருந்த பெட்ரோலை மாற்று வாகனத்தில் உறிஞ்சி அப்புறப்படுத்தினர்.

    இந்த பணியில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே பாப்பான்குளம் பெரிய தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் ரகு (வயது 30), பாலசுப்பிரமணியன் (30), தியாகராஜன் (60) மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியரான கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகரைச் சேர்ந்த ராஜன் மகன் ஜஸ்டின் (37) ஆகியோர் ஈடுபட்டனர். பெட்ரோல் பங்க்கில் பதிக்கப்பட்டு இருந்த டேங்கருக்குள் தண்ணீரை நிரப்பினர். பின்னர் டேங்கரை சுத்தம் செய்து தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். அப்போது அந்த டேங்கருக்குள் பெட்ரோல் வாசனை அதிகமாக இருந்ததால், அதற்குள் மின்விசிறி வைத்து இயக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக டேங்கருக்குள் குபீரென்று தீப்பிடித்து எரிந்தது. இ்ந்த பயங்கர தீவிபத்தில் டேங்கரின் நுழைவுவாயில் பகுதியில் ஏணியில் நின்ற ரகு மீது தீப்பிடித்ததுடன், அவர் சுமார் 20 அடி உயரத்துக்கு ஏணியுடன் தூக்கி வீசப்பட்டார். மேலும் அங்கு நின்ற ஜஸ்டினும் உடல் கருகி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ரகு, ஜஸ்டின் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரகுவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே ரகு பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜஸ்டினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த ரகுவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கனி என்பவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×