search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்கரை மகாராஜன்
    X
    தென்கரை மகாராஜன்

    ஆரல்வாய்மொழி அருகே தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

    ஆரல்வாய்மொழி அருகே தந்தை திட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி அருகே தந்தை திட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    ஆரல்வாய்மொழி வடக்கூர் கீழத் தெருவை சேர்ந்தவர் முருகன். சலவை தொழிலாளி. இவருடைய மனைவி நாகம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர்.

    மூத்த மகன் தென்கரை மகாராஜன் (வயது 22) டிப்ளமோ படித்து விட்டு, கடந்த ஒரு வருடமாக ஆரல்வாய்மொழியில் உள்ள கூட்டுறவு நூற்பாலையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த பொங்கல் தினத்தில் இருந்து தென்கரை மகாராஜன் சரியாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் புதிய வேலைக்கு அவர் முயற்சித்ததாகவும் தெரிகிறது. இதனை அறிந்த முருகன், தென்கரை மகாராஜனை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். முருகனுக்கு செண்பகராமன்புதூர் மரப்பாலம் அருகே பி.சி. காலனியில் ஒரு வீடும் உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று அங்கு சென்ற தென்கரை மகாராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை திட்டியதால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×