search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காருக்குள் பிணமாக கிடந்த வாலிபர்
    X
    காருக்குள் பிணமாக கிடந்த வாலிபர்

    தக்கலை அருகே காருக்குள் பிணமாக கிடந்த வாலிபர்

    தக்கலை அருகே காருக்குள் வாலிபர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டையில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் நேற்றுஇரவு முதல் ஒருகார் நின்றபடி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அந்த காருக்குள் பார்த்தனர்.

    அப்போது காருக்குள் டிரைவர் சீட்டில் வாலிபர் ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப்-இன்ஸ் பெக்டர் ரத்தினராஜ் மற்றும் போலீசார் சென்றனர்.

    அவர்கள் கார் கதவை உடைத்து உள்ளே சென்று பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். அவர் யார்? என்று விசாரணை நடத்தினர். அதில் அவர் குலசேகரம் அருகே உள்ள மடத்துவிளையை சேர்ந்த சுபாஷ்(வயது34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுபாசின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுபாஷ் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது காருக்குள் மதுபாட்டில் மற்றும் சிரிஞ்ச் உள்ளிட்டவை கிடந்தன.

    இதனால் அவர் மதுவில் வி‌ஷம் கலந்தோ, சிரிஞ்சில் வி‌ஷத்தை ஏற்றி அதனை உடலில் செலுத்தியோ தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதனால் அவர் ஏதேனும் மனவேதனையில் இருந்தாரா? என்று அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×