search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவாடு
    X
    கருவாடு

    தொடர் மழையால் அழுகிய கருவாடுகளை காயவைக்கும் பணி- வியாபாரிகள் மும்முரம்

    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தொடர் மழையால் அழுகிய கருவாடுகளை காயவைத்து கோழி தீவனத்துக்கு சங்காயமாக ஆக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை துறைமுகப் பகுதியில் மீன் கருவாடு வியாபாரிகள் மீன்களை ஏலத்துக்கு எடுத்து உப்பு தண்ணீரில் ஊறவைத்து வெயிலில் உலர விட்டு அதை பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பேராவூரணி, மதுக்கூர் ஆகிய பகுதியில் மார்க்கெட் மற்றும் சந்தைப் பகுதிகளில் சில்லறையாகவும் மொத்தமாகவும் விற்பனை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 10 தினங்களாக பெய்து வந்த தொடர் மழையால் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த மீன் கருவாடு முற்றிலும் மழை நீர் சூழ்ந்து அழுகிப் போனது. இதனை அடுத்து தற்போது வெயில் அடிக்க துவங்கியதால் மழையில் வீணாகிப் போன மீன் கருவாட்டை சங்காயமாக ஆக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதுபற்றி கருவாடு வியாபாரி மீனாம்பாள் கூறும்போது:-

    அதிராம்பட்டினம் பகுதியில் மீன்களை ஏலத்துக்கு எடுத்து அதை வெயிலில் காயவைத்து மீன் கருவாடாக சந்தைகளில் விற்று வருகிறோம். இந்நிலையில் தொடர் மழையால் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கருவாடுகள் வீணாகிப் போனது. நல்ல கருவாடாக இருந்தால் கிலோ ரூ.80க்கு போகும்நிலையில் தற்போது மழையால் வீணாகி போனதால் கிலோ 15 ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது.

    வீணாக போன கருவாடுகள் கோழித் தீவனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு சங்காயம் எனப்பெயர். இந்த சங்காயம் கோழி தீவனம் தயார் செய்வதற்கு நாமக்கல்லுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.
    Next Story
    ×