search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    கோவையில் 23-ந்தேதி ராகுல் ரோடு ஷோ நிகழ்ச்சி முழு விபரம்

    ராகுல் காந்தி நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், செல்லும் இடங்கள் ஆகியவற்றை டெல்லியில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய உள்ளார்.

    முதற்கட்டமாக 23-ந்தேதி முதல் 3 நாட்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

    ராகுல் காந்தி நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், செல்லும் இடங்கள் ஆகியவற்றை டெல்லியில் இருந்து வந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அனைத்து இடங்களுக்கும் அதிகாரிகளை அழைத்து சென்றார். இன்று கோவையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    ராகுல் காந்தியின் 3 நாள் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-

    23-ந்தேதி (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் காளப்பட்டி புறப்பட்டு செல்கிறார். 11.30 மணி முதல் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் கூட்டத்தில் கலந்துரையாடுகிறார். மதியம் அவர்களுடன் உணவருந்துகிறார்.

    பிற்பகல் 2.15 மணிக்கு அவினாசி சாலையில் ரோடு ஷோ செல்கிறார். அவினாசி பஸ் நிலையம், அனுப்பர்பாளையம் பகுதிகளில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து காரில் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் பொது நிகழ்ச்சியில் பேசுகிறார்.

    இரவில் திருப்பூரில் உள்ள அரசு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    மறுநாள் (24-ந்தேதி) காலையில் திருப்பூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் செல்கிறார். ஊத்துக்குளி, ஈரோடு, பெருந்துறை ஆகிய பகுதிகளில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    மதியம் 1 மணிக்கு சின்ன மலை செல்கிறார். அங்குள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். சின்னமலையில் மதிய உணவு அருந்துகிறார்.

    மாலை 4 மணிக்கு காங்கேயம் செல்கிறார். அங்கு கட்சியினர் மற்றும் பொதுமக்களின் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    மாலை 6 மணிக்கு தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவு தாராபுரத்தில் தங்குகிறார்.

    மறுநாள் (25-ந்தேதி) காலையில் கரூர் மாவட்டம் செல்கிறார். அங்கு வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வேடசந்தூரில் பேசுகிறார்.

    அங்கிருந்து காரில் மதுரை புறப்பட்டு செல்கிறார். மாலை 5 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    Next Story
    ×