search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மணப்பாறை அருகே முதியவர் அடித்துக்கொலை- குடிபோதையில் பேரன் வெறிச்செயல்

    மணப்பாறை அருகே குடிபோதையில் தாத்தாவை கட்டையால் அடித்துக்கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.
    மணப்பாறை:

    மணப்பாறை அருகே குடிபோதையில் தாத்தாவை கட்டையால் அடித்துக்கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வடக்கு சேர்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 26). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையின் போது இவர் குடிபோதையில் பெற்றோர் மற்றும் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

    மேலும் தனக்கு சொத்து கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை, பொங்கலன்று இப்படி தகராறு செய்வது சரியல்ல என்று குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார் தனது தந்தை உள்ளிட்ட அனைவரையும் அடித்து, வீட்டில் வைத்து பூட்டி வைத்துள்ளார்.

    இதை வீட்டிற்கு வெளியில் இருந்த அவருடைய தாத்தா வேலு(85) தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ்குமார் தன் கையில் இருந்த கட்டையால் வேலுவை கடுமையாக அடித்து தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குடிபோதையில் தாத்தாவை பேரனே அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×