search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கலுக்காக விற்பனைக்கு வந்துள்ள மண்பானைகள்
    X
    பொங்கலுக்காக விற்பனைக்கு வந்துள்ள மண்பானைகள்

    பொங்கல் பண்டிகையையொட்டி பெரம்பலூரில் மண்பானை- கரும்பு விற்பனை மும்முரம்

    பொங்கல் பண்டிகையையொட்டி பெரம்பலூரில் மண்பானைகள், கரும்பு கட்டுகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    பெரம்பலூர்:

    உழவுக்கு வித்திட்ட இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை மறுநாள்(வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. அன்று பொதுமக்கள் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க பொதுமக்கள் பெரம்பலூருக்கு படையெடுத்து வருகின்றனர்.

    பெரம்பலூர் பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, துறையூர் ரோடு, புதிய பஸ் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் கரும்பு கட்டுகள், மஞ்சள் குலை, வாழைத்தார்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக குவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தை சுற்றி மண் பானைகளின் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது. பொங்கல் சீர்வரிசை கொடுக்க, வீட்டிற்கு பொங்கலிடுவதற்கு உள்ளிட்டவற்றுக்காக அளவிற்கேற்றாற்போல் மண்பானை, அடுப்புகள், மண்ணாலான மூடிகள் மற்றும் கரும்பு கட்டுகள், மஞ்சள் குலை, வாழைத்தார்கள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

    பெரம்பலூர் பழைய பஸ் நிலையம், கடைவீதிக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்கள் வாங்கி செல்வதை காணமுடிகிறது. மேலும் புத்தாடைகள் உள்ளிட்டவை எடுப்பதற்காக கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, பள்ளிவாசல் தெரு, சூப்பர் பஜார் ஆகிய பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதேபோல் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கும், பூ, பழம் மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. வண்ண கோலப்பொடியின் விற்பனையும் நடைபெற்றது. மாடுகளுக்கான மூக்கணாங்கயிறு, கழுத்து மணி, கொம்புகளில் கட்டப்படும் கயிறு ஆகியவற்றின் விற்பனையும் படுஜோராக நடந்தது. இந்நிலையில் இடையிடையே மழை பெய்து வருவதால், பொங்கல் பொருட்கள் விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுமக்களும் சிரமமடைகின்றனர்.

    ஒரு ஜோடி கரும்பு ரூ.80-க்கும், 10 கரும்புகளை கொண்ட ஒரு கட்டு தரத்திற்கு ஏற்றாற்போல் ரூ.350-ல் இருந்தும் விற்பனையானது. மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.50-க்கு விற்பனையானது. தொடர் மழையினால் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு பாதிக்கப்பட்டதால், அதன் விலை அதிகரித்துள்ளது. மண்பானைகள் அளவுக்கு ஏற்றாற்போல் ரூ.100, ரூ.150, ரூ.200 ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றன. ஒற்றை அடுப்பு ரூ.250-க்கும், இரட்டை அடுப்பு ரூ.350-க்கும் விற்பனையானது. மண்ணாலான மூடிகள் ரூ.50-க்கு விற்பனையானது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் இவற்றின் விலை அதிகரிக்கலாம், கரும்பு கட்டின் விலை ரூ.ஆயிரத்தை தொடலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×