
சென்னை:
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (13-ந் தேதி) ராமநாதபுரம், கடலூர் மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.
14-ந் தேதி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 15 மற்றும் 16-ந் தேதிகளில் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது.
வேதாரண்யம் 18 செ.மீ., பேராவூரணி 15, தலைஞாயிறு, அரபிட்சணம் தலா 14 செ.மீ. திருப்பூண்டி 12, குடவாசல், முத்துப்பேட்டை தலா 11 செ.மீ., பட்டுக்கோட்டை 10 செ.மீ., மதுக்கூர், மன்னார்குடி, மணமேல்குடி, திருவாரூர் தலா 9 செ.மீ., நாகப்பட்டினம், கும்பகோணம், நன்னிலம், பஞ்சாறு தலா 8 செ.மீ., மயிலாடுதுறை, காரைக்கால் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் இன்றும், நாளையும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.