search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    கல்லூரி மாணவியின் தந்தையை குத்திக்கொன்ற வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி

    கோவையில் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் கல்லூரி மாணவியின் தந்தையை குத்திக்கொன்ற வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் ஜான் (வயது 62). இவர் அந்த பகுதியில் உள்ள தென்னை நார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இவரது மனைவி செலின்ரோசி (55). இவர் ஓடக்கல்பாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் ஆகி பெங்களூரில் வசிக்கிறார். இளைய மகள் மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் எம்.ஏ. படிக்கிறார். சார்லஸ் ஜானின் சொந்த ஊர் மார்த்தாண்டம் ஆகும். இதனால் இளைய மகளை சொந்த ஊரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து அங்கிருந்து கல்லூரிக்கு அனுப்பி வருகிறார்.

    கல்லூரி மாணவியான இளைய மகளை குமாரபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (25) என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்தார். மாணவியிடம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    மேலும் சார்லஸ் ஜானையும் சந்தித்து உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டார். ஆனால் சார்லஸ் ஜான், கார்த்திக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்தார். மேலும் மகளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயமும் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், தனக்கு பெண் தர மறுத்த சார்லஸ் ஜான் மீது ஆத்திரத்துடன் இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை சார்லஸ் ஜான், செலின்ரோசி ஆகியோர் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றனர். மதியம் சார்லஸ் ஜான் மட்டும் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது கார்த்திக்கும் வீட்டுக்கு வந்தார்.

    அவர் சார்லஸ் ஜானிடம் அவரது மகளை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டு மீண்டும் வற்புறுத்தினார். ஆனால் சார்லஸ் ஜான், அவரை கண்டித்து வெளியே செல்லும்படி கூறினார். மேலும் கார்த்திக்கை அவர் தாக்கியதாகவும் தெரிகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த கார்த்திக், அங்கு கிடந்த கத்திரிக்கோலை எடுத்து சார்லஸ் ஜானை சரமாரியாக குத்தினார். முதுகு மற்றும் கழுத்து பகுதியில் கத்திக்குத்து பலமாக விழுந்தது. இதில் சார்லஸ் ஜான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார்.

    பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற கார்த்திக், போலீசுக்கு பயந்து வி‌ஷத்தை குடித்து தற்கொலை முயன்றார். தான் வி‌ஷம் குடித்தது பற்றி நண்பர்களுக்கு தெரிவித்தார். நண்பர்கள் கார்த்திக்கை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே மதிய சாப்பாட்டுக்கு சென்ற சார்லஸ் ஜான், திரும்பி வராததால் அவரை தேடி கம்பெனி ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். அங்கு சார்லஸ் ஜான் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சார்லஸ் ஜான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பள்ளிக்கு சென்ற சார்லஸ் ஜானின் மனைவி செலின்ரோசி, கணவர் இறந்தது பற்றி அறிந்ததும் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    கொலையாளியான கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×