search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    பறவை காய்ச்சல் பீதி எதிரொலி- முட்டை விலை மேலும் 40 காசுகள் சரிவு

    கேரளா மற்றும் வட மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 40 காசுகள் சரிந்துள்ளது.

    சேலம்:

    கேரளா மற்றும் வட மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பீதி நிலவுவதால் முட்டையின் நுகர்வு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதையடுத்து நாமக்கல் மண்டலத்தில் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் அதன் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

    கடந்த 6-ந் தேதி ரூ.5.10 ஆக இருந்த முட்டை விலை 7-ந் தேதி 4.85 ஆக சரிந்தது. பின்னர் 9-ந் தேதி 4.60 ரூபாயாக குறைந்தது. இன்று முட்டை விலை மேலும் 40 காசுகள் சரிந்து 4.20 ரூபாயானது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் ஒரே வாரத்தில் முட்டை விலை 90 காசுகள் குறைந்துள்ளது குறுப்பிடதக்கது. முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் சிங்கராஜ் தலைமை தாங்கினார். தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் டாக்டர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில், தீவன மூலப்பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை பண்ணையாளர்களுக்கு வழங்கவும், தீவனங்களை ஆய்வு செய்வதற்காக நவீன பகுப்பாய்வு கூடம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    முட்டை விலையை நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து ஒரளவு குறைத்து விற்பனை செய்வது எனவும், வியாபாரிகள் வலியுறுத்த லுக்காக விலை குறைப்பில் ஆர்வம் காட்டினால் பண்ணையாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் பொது மக்களிடம் முட்டை மற்றும் கோழி இறைச்சி குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சங்க உறுப்பினர்களின் பண்ணைகளில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டை, கோழிகளை பெற்று அவற்றை சமைத்து மக்களிடையே கொடுத்து இவற்றால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்கள் சங்க அலுவலகம் அருகில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் முட்டை, கோழி இறைச்சியை பல்வேறு சுவைகளில் தயாரித்து விற்பனை செய்யும் வகையில் உணவகம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது. பறவை காய்ச்சலால் கோழிப் பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பண்ணையாளர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், பண்ணைகளை தூய்மையாக வைத்திருப்பதுடன், நோய் தொற்று ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×