search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வானிலை ஆய்வு மையம்
    X
    சென்னை வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்

    இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், புதுவை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழையும், நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள் கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

    11.01.2021 : ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    12.01.2021 : திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    13.01.2021 மற்றும் 14.01.2021 :
    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப்பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

    கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மீமிசல்(புதுக்கோட்டை), திருவாடானையில் (ராமநாதபுரம்) தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இன்று முதல் ஜனவரி 14-ந்தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×