search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
    X
    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

    இந்த மாத இறுதிக்குள் வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும்- கலெக்டர்களுக்கு தேர்தல் அதிகாரி அறிவுரை

    வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த மாத இறுதிக்குள் செயல்முறை சோதனை நடத்தப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட கலெக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக செய்து வருகிறது.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது.

    இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக தேர்தல் கமி‌ஷன் எடுத்துள்ளது.

    வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, தமிழக சட்டசபை தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை நடத்தினார்.

    தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் துறை கூட்ட அரங்கில் இருந்து காணொலி வாயிலாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் பேசினார். அப்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் செய்ய வேண்டிய தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.

    புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்களும் இந்த மாத இறுதிக்குள் செயல்முறை சோதனை நடத்தப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    அரியலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்முறை சோதனை அனைத்துக் கட்சியினர் முன்பு பரிசோதித்து காட்டப்பட்டுவிட்டது. இது பற்றிய அறிக்கையை உடனே அனுப்பி வைக்க கலெக்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    மீதம் உள்ள மாவட்டங்களில் இன்னும் ஒருவாரத்துக்குள் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்முறை பரிசோதனை செய்யப்பட்டு தயாராக இருக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். கொரோனா வைரஸ் நடைமுறையை பின்பற்றவும் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    வருகிற 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதையடுத்து, 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் சென்னையில் நடைபெறும் விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக வாக்காளர் களாக பதிவு செய்து கொண்டவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில் பங்கேற்கும் கவர்னருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அப்போது விழாவில் பங்கேற்க கவர்னர் ஒப்புதல் அளித்தார்.

    Next Story
    ×