search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சூலூர் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் அடித்துக்கொலை

    சூலூர் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கள்ளப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கல்லுக்குழி அருகில் ஒண்டிகாரன் தோட்ட பகுதியில் சுதர்சன் (வயது26) என்பவர் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஒடிசா ஆகும். இவருக்கு திருமணமாகி சத்யா (23) என்கிற ரூனு என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். சுதர்சன் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.

    இவரது வீட்டுக்கு அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவர் வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில், சுதர்சனின் மனைவியாகிய சத்யாவுக்கு அருகில் வசிக்கும் ரஞ்சித்துக்கும் பல மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது குறித்து அறிந்த சுதர்சன் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் ரஞ்சித்தையும் அழைத்து அவர் கண்டித்ததாக தெரிகிறது. ஆனால் சத்யா இதைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் ரஞ்சித் தனது சொந்த ஊரான பீகாருக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஞ்சித் மீண்டும் சுதர்சன் வீட்டுக்கு வந்துள்ளார். நடந்தவற்றை எல்லாம் மறந்து நண்பர்களாக இருப்போம் என அவர் கூறி உள்ளார். இதனை தொடர்ந்து அங்கு, ரஞ்சித் மற்றும் சுதர்சன், சத்தியா ஆகிய 3 பேரும் மது அருந்தி உள்ளனர். சிறிது நேரம் கழித்து சுதர்சன் இறைச்சி வாங்குவதாக கூறிக் கொண்டு வெளியே சென்றுள்ளார். பிறகு திரும்பவும் அவர் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது சத்யாவும், ரஞ்சித்தும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சுதர்சன் அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ரஞ்சித்துக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மயங்கி கீழே விழுந்தார். தனது மனைவி ரத்த வெள்ளத்தில் கீழே இறந்து கிடந்ததை கண்ட சுதர்சன் உடனே அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

    அவர் தலைதெறிக்க ஓடுவதை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது சத்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், ரஞ்சித் உயிருக்கு போராடிய நிலையில் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதுகுறித்து சூலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இது குறித்து அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த ரஞ்சித்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, சூலூர் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் இது குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சுதர்சனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட தனது மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் சூலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×