search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஆர் பாலு
    X
    டிஆர் பாலு

    100 நாள் வேலை திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க கோரி டி.ஆர்.பாலு கடிதம்

    நூறு நாள் வேலை திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 மாத ஊதியத்தை வழங்க கோரி வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
    சென்னை:

    மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் கிராம மக்கள் சபைக்கூட்டங்கள் நடத்தி, அவை வாயிலாக கிராமப் பகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறது.

    இக்கூட்டங்களில் பங்கேற்கும் பல்வேறு மாவட்டங்களில் கிராமப் பகுதி மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் அக்டோபர் மாதம் முதல் சென்ற மூன்று மாதங்களாக தங்களுக்கு ஊதியம் அளிக்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயை உறுதிப்படுத்தும் திட்டமாகும்.

    இதில் பணியாற்றிடும் மக்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்காமல், அதுவும் மூன்று மாதங்களாக வழங்காமல் தாமதம் செய்வது அந்த ஏழை தொழிலாளர்களின் அன்றாட வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் சிதைப்பதுடன் அவர்களை ஆரிருளில் தள்ளிவிடும் கொடுமை ஆகும்.

    எனவே, இந்த பிரச்சினையை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தேவையான நிதியை வழங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் மூன்று மாதங்களாக தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியம் அனைத்தையும் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×