search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்புரவு பணியாளர்கள் சம்பள பாக்கியை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    துப்புரவு பணியாளர்கள் சம்பள பாக்கியை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    சம்பள பாக்கியை வழங்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் - குடிநீர் திறப்பாளர்களும் தர்ணா

    சம்பள பாக்கியை வழங்கக்கோரி திருப்பூரில் வடமாநில துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் திறப்பாளர்களும் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நல்லூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பலர் பணியாற்றி வருகின்றனர். இதில் வட மாநிலத்தவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களுக்கு கடந்த 2 மாத ஊதியம் மாநகராட்சியால் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பள பாக்கியை வழங்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். அத்துடன் கோவில்வழி அருகே உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்களின் போராட்டம் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.

    அதே போல் திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 4 மண்டலங்கள் உள்ளன. அதில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களாக 105 பேர் குடிநீர் திறப்பாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.4,705 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 7 மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் திறப்பாளர்கள் ஆவேசம் அடைந்தனர். நேற்று நல்லூர், மாநகராட்சி 3-வது மண்டலம் அலுவலக நுழைவாயில் முன்பு 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட குடிநீர் திறப்பாளர்கள் 30 பேர் சம்பள பாக்கியை வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து மாலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற 1-ந்தேதி சம்பள பாக்கியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்காத தண்ணீர் திறப்பாளர்கள், அனைத்து தண்ணீர் திறப்பாளர்களுடன் இணைந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நாளை (இன்று) போராட்டம் நடத்தப்படும் என்று கூறி கலைந்து சென்றனர்.

    இது போல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பும் துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×