search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு அபராதம்

    நாகர்கோவில் நகரப்பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு மீண்டும் இருந்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ஆ‌ஷா அஜித்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவர் கடைகளில் சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்து பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதிபெருமாள், மாதவன்பிள்ளை, ஜான், சத்தியராஜ் உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 3 கடைகளிலும் 2 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இதேபோல் நாகர்கோவில் நகரில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் சென்ற 20 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுவரை நாகர்கோவில் நகரில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்து 150 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×