search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணக்கம்பாளையத்திலுள்ள கவிதா வீட்டில் மருத்துவ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்ட போது எடுத்த படம்.
    X
    கணக்கம்பாளையத்திலுள்ள கவிதா வீட்டில் மருத்துவ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்ட போது எடுத்த படம்.

    கணவருடன் கர்ப்பிணி தற்கொலை விவகாரம் - மருத்துவ அலுவலர்கள் விசாரணை

    கணவருடன் கர்ப்பிணி தற்கொலை விவகாரம் தொடர்பாக மருத்துவ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
    பெருமாநல்லூர்:

    திருப்பூர்மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் மீனாட்சி நகரில் வசித்து வந்தவர் பாலமுருகன் (வயது 31). கரூரை சேர்ந்த இவர், திருப்பூரில் பனியன் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த கவிதா (21) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு பெற்றோர்கள் முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    தற்போது கவிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்களது வீட்டில் பாலமுருகன் - கவிதா இருவரும் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருமாநல்லூர் போலீசார் தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, பாலமுருகன்-கவிதா இருவரும் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து கவிதாவின் தந்தை சண்முகம் அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் தற்கொலை செய்வதற்கு முன்தினம் பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணியான கவிதா மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். மருத்து பரிசோதனைகள் முடிவுகளில் குழந்தை நன்றாக இருந்ததாக வட்டார மருத்துவர் அலுவலர் ஶ்ரீவித்யா தெரிவித்துள்ளார்.

    எனவே, தற்கொலை சம்பவம் குறித்து அறிந்த மருத்துவ அலுவலர்கள் நேற்று கணக்கம்பாளையத்தில் உள்ள கவிதாவின் வீட்டிற்கு சென்று அருகில் வசித்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, தம்பதியின் உறவினர்கள் கூறுகையில், பாலமுருகன்- கவிதா தம்பதியரிடம் அவர்களது பெற்றோர் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக கவிதாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் பங்கேற்கவில்லை என்றனர்.

    மேலும் பாலமுருகன் குழந்தைகளிடத்தில் அன்பு கொண்டவர் என்றும், கடந்த ஆண்டு அவரது சகோதரரின் மகள் இறந்த காரணத்தினால் அதுகுறித்து கவலையில் இருந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக பாலமுருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அருகிலுள்ளவர்களிடம் மனசு சரியில்லை என்று கூறியதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் மனம் விரக்தியடைந்த நிலையிலேயே தம்பதியர் இந்த சோகமான முடிவை எடுத்திருக்கலாம் என்பது தெரியவருகிறது.
    Next Story
    ×