search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு
    X
    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அனுமதி- 300 வீரர்கள், 50 சதவீத பார்வையாளர்கள் பங்கேற்கலாம்

    ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

    ஜூலை மாதத்துக்கு பிறகு ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டும் அத்தியாவசிய பணிகள் அனைத்துக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மருத்துவ நிபுணர்களின் வழி காட்டுதலுடன் அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா பரவல் 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி உள்ளது.

    என்றாலும் பொது இடங்களில் மக்கள் கூடும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். அதிகளவில் மக்கள் திரளும் நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி பெற வேண்டிய கட்டாய நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால் தொடர்ந்து தமிழக அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. மீண்டும் கொரோனா வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.

    புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வர உள்ளது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான
    ஜல்லிக்கட்டு
    போட்டி மிக கோலாகலமாக நடத்தப்படும்.

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதி வழங்குமா? என்பதில் கேள்வி குறி நிலவி வந்தது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுகளை தயார் செய்து வருபவர்களும், மாடுபிடி வீரர்களும் இது தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுவெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு வருடமும் தை மாதத்திலிருந்து அந்த வீர விளையாட்டில் பெருமளவு மகிழ்ச்சியோடு பங்கு பெற்று வருகின்றனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, 2017 முதல்
    ஜல்லிக்கட்டு
    நடத்தப்பட்டு வருகிறது.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது காளைகள் மற்றும் மாடு பிடிப்பவர்கள் நேரடியாக கலந்து கொள்வது மட்டும் அல்லாமல், பொது மக்களும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகும்.

    ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன், தற்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, எதிர்வரும் 2021-ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளிக்கிறது.

    ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

    எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திறந்த வெளியின் அளவிற்கேற்ப (மொத்த அளவு) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் வெப்ப பரிசோதனை (தெர்மல் சோதனை) செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கோவிட்-19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும்.

    மேலும், நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முக கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்படுகிறது.

    இதற்கான விரிவான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×