search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டவர் என்றால் கமல் அதிமுகவில் சேர்ந்திருக்க வேண்டும்- அமைச்சர் பேட்டி

    எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டவர் என்றால் கமல்ஹாசன் அதிமுகவில் சேர்ந்திருக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது சிறப்பான ஆட்சியால் தமிழக மக்களுக்கு தினமும் எண்ணற்ற திட்டங்கள் கிடைத்து வருகின்றன.

    ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் பொய்களை கூறி வருகிறார். மதுரையில் எய்ம்ஸ் அமையாது என்கிறார். நிச்சயம் மதுரைக்கு எய்ம்ஸ் வரும். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். தி.மு.க. ஆட்சியில் கட்டிடமே இல்லாமல் மருத்துவக் கல்லூரி தொடங்கினார்கள். ஆனால் எதையுமே தங்கள் ஆட்சிக் காலத்தில் செய்யாமல் இப்போது அரசுக்கு எதிராக தேவையற்ற குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.

    நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். கடந்த தேர்தலின்போது அவர் வந்தபோது கூடிய கூட்டத்தை விட இப்போது அவரை பார்க்க கூட்டம் குறைந்துவிட்டது.

    கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது நகைச் சுவை வடிவேலுக்கு சென்ற இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது, நடிகை குஷ்புவும் தேர்தல் பிரசாரம் செய்தார் கூட்டம் அதிகமாக வந்தது. ஆனால் அந்த கூட்டம் ஓட்டாக மாறவில்லை. நடிகர்களை மக்கள் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் அவர்கள் பிரசாரம் செய்யும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா மக்கள் மனதை வென்றவர்கள்.‌ மக்களும் அவர்களை மிகப் பெரும் தலைவர்களாக போற்றினார்கள். ஆனால் தற்போது பாஸ்ட் புட் உணவு போல திடீர் முதலமைச்சராக சிலர் நினைக்கிறார்கள். அவர்களது எண்ணம் நிச்சயம் நடக்காது.

    நடிகர் கமல்ஹாசனை பொறுத்தவரை அவரை ஒரு கட்சியின் தலைவராக மக்கள் ஏற்கவில்லை. மக்களிடம் நான் எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டவன் என்று சொல்லுகிறார் எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி ஆட்சியில் இருக்கிறது. அவரது தொண்டர்கள் நாங்கள் இருக்கிறோம்.

    எம்.ஜி.ஆரால் கமல் ஹாசன் வளர்க்கப்பட்டது உண்மை என்றால் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்து இருக்கவேண்டும். தனிக்கட்சி தொடங்கி உள்ளவர் எம்.ஜி.ஆர். பெயரை சொல்லுவது சுயநலம். அவரது கொள்கை என்ன என்பதை இதுவரை மக்களிடம் சொல்லவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். திரைப் படங்களிலேயே கட்சி கொடியை காண்பித்து மக்களிடம் செல்வாக்கு பெற்றார். ஆனால் நடிகர்கள் இப்போது முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள் தவிர மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

    எனவே எம்.ஜி.ஆர். தொடங்கி இயக்கம் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் மக்களும் அ.தி.மு.க.வை தொடர்ந்து ஆதரிப்பார்கள்.

    அ.தி.மு.க. தான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்கியது அதிமுக தான் எப்போதுமே எந்த தேர்தல் வந்தாலும் பெண்களின் ஓட்டு அதமுகவுக்கு தான் அதிகம் கிடைக்கும். திமுக நிர்வாகிகளின் வீட்டுப் பெண்கள் கூட அ.தி.மு.க.வுக்கு தான் வாக்களிப்பார்கள்.

    அப்படி அதிமுகவிற்கு பெண்கள் மத்தியில் எப்போதுமே அதிக செல்வாக்கு உண்டு. எனவே எத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×