search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த் கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி- சின்னம் ஆட்டோ

    ரஜினி வருகிற 31ந் தேதிதான் கட்சி பெயரை வெளியிட இருந்த நிலையில் அவரது கட்சி பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்று தெரிந்திருப்பதால் ரசிகர்கள் அதை வரவேற்றுள்ளனர்.
    சென்னை:

    புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டார்.

    கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக தனது ரசிகர் மன்றத்தை “ரஜினி மக்கள் மன்றம்” என்று பெயர் மாற்றினார். மன்ற நிர்வாகிகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர்களை சேர்க்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு மிகத் தீவிரமாக நடைபெற்றது.

    இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவியதால் ரஜினி கட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கின. ரஜினி சுமார் 7 மாதங்கள் வீட்டிலேயே இருக்க நேரிட்டது. கட்சி பணிகளிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையே ரஜினி கட்சி தொடங்கி சுற்றுப்பயணம் செய்யும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பதில் சந்தேகம் நிலவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து கடந்த மாதம் 30-ந் தேதி ரஜினி ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் கட்சி தொடங்குவது உறுதி. டிசம்பர் 31-ந் தேதி இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

    கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி, மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ஆகியோரை நியமித்தார்.

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்த ரஜினி “மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை” என்ற கோ‌ஷத்தை வெளியிட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள் கடந்த 12-ந் தேதி அவரது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

    இதற்கிடையே ரஜினி கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக மன்ற நிர்வாகிகள் சிலரை ரஜினி டெல்லிக்கு அனுப்பி இருந்தார். அவர்கள் வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தனர்.

    அதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் ரஜினி கட்சி தொடர்பான தகவல்கள், ஆவணங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது. நேற்று தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 9 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட் டன. கமல்ஹாசனின் கட்சிக்கு புதுச்சேரியில் “டார்ச் லைட்” சின்னம் கிடைத்துள்ளது.

    டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு “பிர‌ஷர் குக்கர்” சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    தேர்தல் ஆணையம் அறிவித்த கட்சிகள் மற்றும் சின்னங்கள் பட்டியல் வரிசையில் உள்ள 9 கட்சிகளில் 8-வது கட்சியாக “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளது. எர்ணாவூர் பாலாஜி நகரை தலைமை இடமாக கொண்டு இந்த கட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலில் அந்த கட்சியை பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் இருந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ரஜினி பதிவு செய்துள்ள கட்சிதான் “மக்கள் சேவை கட்சி” என்று தெரிய வந்துள்ளது.

    தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் அந்தகட்சியின் நிறுவனராக ரஜினிகாந்த்தின் பெயர் இடம் பெற்றிருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    (டி.எம்.கே., ஏ.டி.எம்.கே. என்று சொல்வது போல ரஜினி கட்சியின் பெயர் எம்.எஸ்.கே. என்று அழைக்கப்படும்.)

    ரஜினி கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் “மக்கள் சேவை கட்சி” என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தேர்தல் ஆணையம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி வெளியிட்ட பட்டியலில் எர்ணாவூரை தலைமையிடமாக கொண்டு “அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்” என்ற கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியானது. அந்த கட்சியை “மக்கள் சேவை கட்சி” என்று பெயர் மாற்றம் செய்வதற்கு 2½ மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    அந்த மனுவை ஏற்றுக்கொண்டு கட்சியின் பெயரை “மக்கள் சேவை கட்சி” என்று மாற்றுவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 234 தொகுதிகளிலும் இந்த கட்சி போட்டியிடும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    ரஜினியின் இந்த புதிய கட்சிக்கு தேர்தல் சின்னத்தையும் தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் சின்னமாக “ஆட்டோ” தேர்வு செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. ரஜினி தரப்பில் “பாபாவின் முத்திரை” சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

    பாபாவின் இரண்டு விரல்களை உயர்த்தி காட்டும் ஹஸ்த முத்திரை சின்னம் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் போன்று தோற்றம் அளிக்கும் என்பதால் அதை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து “ஆட்டோ” சின்னத்தை ரஜினி கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

    2002-ம் ஆண்டு ரஜினி நடித்த “பாபா” படம் தோல்வி அடைந்தாலும் அதில் அவர் காட்டிய ஹஸ்த முத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. எனவேதான் அந்த சின்னத்தை பெற்றால் நன்றாக இருக்கும் என்று ரஜினி நினைத்தார். ஆனால் கிடைக்கவில்லை.

    என்றாலும் “ஆட்டோ” சின்னம் கிடைத்திருப்பது ரஜினிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் திருப்தியை கொடுத்துள்ளது. 1995-ம் ஆண்டு ரஜினி நடித்து வெளியான ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார்.

    தமிழ்நாடு முழுவதும் இந்த படம் அமோக வெற்றி பெற்று ஆரவாரமாக ஓடியது. ரஜினியின் ஆட்டோக்காரன் பாட்டு மிகவும் பிரபல மானது. எனவே “ஆட்டோ” சின்னத்தை தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் மிக எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்று நம்புகிறார்கள்.

    ரஜினி வருகிற 31-ந் தேதிதான் கட்சி பெயரை வெளியிட இருந்த நிலையில் அவரது கட்சி பெயர் “மக்கள் சேவை கட்சி” என்று தெரிந்திருப்பதால் ரசிகர்கள் அதை வரவேற்றுள்ளனர். கட்சி பெயரையும், சின்னத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமித்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.

    தமிழக அரசியலில் இதுவரை ரஜினி அரசியல் பிரவேசம் தொடர்பான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் புதியகட்சி, சின்னமும் பெயரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×