search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்மக்கள்
    X
    கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளும்மக்கள்

    8 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரை திறப்பு- இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம்

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மெரினா கடற்கரை 8 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டு, பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
    சென்னை:

    கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் சென்னையின் மிக முக்கிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 
     
    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் மீனவர் நலச்சங்கம் சார்பில் வந்த வழக்கு ஒன்றில், மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு திறக்கவில்லை என்றால், ஐகோர்ட்டு திறக்க உத்தரவிடும் என்றும் எச்சரித்தனர். சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், மெரினா கடற்கரையை டிசம்பர் 14-ம் தேதி திறக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    அதன்பின்னர் மெரினா திறப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 30-ம் தேதி அறிக்கை வெளியிட்டார். அதில், ‘நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 14-ம் தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்’ என தெரிவித்திருந்தார். 

    அதன்படி இன்று முதல் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 8 மாத இடைவெளிக்குப் பிறகு மெரினா கடற்கரை திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடற்கரையில் இன்று காலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் உற்சாகத்துடன் உடற்பயிற்சி, நடைபயற்சி மேற்கொண்டனர். இளைஞர்கள் ஆங்காங்கே விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல் திருவான்மியூர், பெசன்ட் நகர், நீலாங்கரை, மாமல்லபுரம் கோவில் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதேசமயம், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சுற்றுலா தலங்களுக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

    இதேபோல் மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பொதுமக்கள் பார்வையிடவும் இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    10 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×