search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மினி கிளினிக்
    X
    மினி கிளினிக்

    தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ புதிய திட்டம் - எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

    தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
    சென்னை:

    உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், இந்தியாவில் அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைஇடையே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், இன்னும் ஊரடங்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 85 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை அதிகரிக்க திட்டமிடப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்தும், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன் தொடர்ச்சியாக, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை ராயபுரம், வியாசர்பாடி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்குகளை தொடங்கி வைக்கிறார்.

    பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைகிறது. முதற்கட்டமாக, 47 இடங்களில் இது அமைக்கப்படுகிறது. 20 இடங்களில் இன்று முதல் முதல் செயல்படத் தொடங்குகிறது.

    இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்.

    தற்போது தமிழ்நாட்டில் 1,851 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது. 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு ஆஸ்பத்திரியும் உள்ளது. இந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்ட பிறகு, 3 கி.மீ.க்கு ஒரு ஆஸ்பத்திரி இருக்கும். இங்கு, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு, பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    தொடர்ந்து, வரும் 16-ந்தேதி (நாளை மறுநாள்) சேலம் மாவட்டம் எடப்பாடியில், அந்த மாவட்டத்துக்குரிய 40 மினி கிளினிக்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளையும் தமிழகம் முழுவதும் திறக்க திட்டமிடப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
    Next Story
    ×