search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு சம்பவம் நடந்த வீடு.
    X
    திருட்டு சம்பவம் நடந்த வீடு.

    வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, பணம் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

    சின்னவேடம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கணபதி:

    கோவை சின்னவேடம்பட்டி லட்சுமி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு அபிஷேக் என்ற மகன் உள்ளார். விஜயகுமார் டெக்ஸ்டைல் மெஷினரி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் விஜயகுமார் கடந்த மாதம் 3-ந் தேதி மனைவி மற்றும் மகனை சிங்காநல்லூரில் உள்ள தனது மனைவியின் அக்கா வீட்டில் விட்டு விட்டு வேலை விஷயமாக அருப்புக்கோட்டை சென்றார். இந்த நிலையில் விஜயகுமார் வெளியூர் சென்றுவிட்டு சிங்காநல்லூர் வந்தார். பின்னர் அவர், தனது மனைவி, மகனுடன் சின்ன வேடம்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகுமார் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உட்புறம் வைத்து இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை, ரொக்க பணம் ரூ.20 ஆயிரம், வெள்ளி குங்குமச்சிமிழ், குத்து விளக்கு உள்பட பல விலைமதிப்புள்ள பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. உடனே அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இதே லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் 25 பவுன் நகை மற்றும் ரூ.42 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போனது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். முடிந்தால் எங்களைப் பிடித்துப்பார் என திருட்டு ஆசாமிகள், போலீசாருக்கு சவால் விடுவது போல தொடர்ச்சியாக திருட்டை அரங்கேற்றி வருகின்றனர். இரவு நேர போலீசார் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×